கலர்கலராக பிளாஸ்டிக் குடங்கள் காலையி லிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்தன. குடிநீர் குழாய் சிமெண்ட் திட்டில் அமுதா உட்கார்ந்திருந்தாள். அவளைப் போலவே இன்னும் சில சிறுமிகள், தண்ணி லாரி வந்தால் தகவல் சொல்ல அங்கே தயாராக இருந்தனர். பொழுது பிற்பகலைக் கடந்து போய்க்கொண்டி ருந்தது. அமுதாவுக்கு பசிக்கிறக்கத்தில் தூக்க மாக வந்தது. தெருவில் போன குல்பி ஐஸ் வண்டிக்காரன், சிறுமிகளைப் பார்த்ததும் திரும்ப திரும்ப மணி அடித்து அழைத்தான். அமுதாவின் கையில் காசில்லை. ஆனால் குல்பி ஐஸ்காரன் கை நீட்டி அழைத்ததும் ஓடிப்போ னாள். அவன் நீண்ட நாள் பழகியது போல, “நீ அமுதா தான, கார்ப்பரேசன் ஸ்கூலுல ரெண்டாங்கிளாஸ் தான படிக்கிற” என கேட்டதும், இவள், ஆமா.. ஆமா.. என ஆச்சர்யமாக தலையாட்டினாள். அவன் அணிந்திருந்த தொப்பி அமுதா வுக்கு பிடித்திருந்தது. அவன் காசு வாங்காமலேயே, “இந்தா குல்பி ஐஸ் சாப்பிடு” என ஒன்றைக் கொடுத்தான். அமுதா “வேணாம்னா...” என்று சொல்லிக்கொண்டே வாங்கிக்கொண்டாள். கையில் இருந்த குல்பி ஐஸை சூப்புவதற்கு வாயருகில் கொண்டு போனாள். அதற்கு முன் ஒரு தடவை, வண்டியில் கட்டியிருந்த பித்தளை மணியை அடித்துப் பார்க்க ஆசைப்பட்டாள். “அண்ணா ஒரு தடவ அடிச்சுக்க வண்ணா..” என்றாள். ஐஸ்க்காரன் சிரித்தவாறே அதற்கு சம்மதித்தான். அமுதா கயிற்றைப்பிடித்து இழுத்தாள். மணி நங்.. நங்கென்று சத்தம் எழுப்பியது. அமுதா சந்தோசம் கொப்பளிக்க குல்பி ஐஸை சுவைக்கப் போனபோது பின்னந் தலை யில் படாரென அடி விழுந்தது.
அமுதா நிமிர்ந்து பார்த்தாள் அம்மா பத்ரகாளியாட்டம் நின்று கொண்டி ருந்தாள். “தண்ணி லாரி வந்தது கூடத் தெரியாம பகல்ல அப்படி என்னடி தூக்கம்” என அம்மா கத்தினாள். அமுதா அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கையிலிருந்த குல்பி ஐஸ் எங்கே போனது என திரும்ப திரும்ப தேடினாள். அதைச் சுவைத்துப்பார்ப்பதற்குள் அம்மா குறுக்கே வந்தது அமுதா வுக்கு பெரும் வருத்தமாக இருந்தது. அவள், “குல்பி ஐஸ்ம்மா...”என அழுக ஆரம்பித்தாள். “குடிக்கத்தண்ணி இல்லையாம், இவளுக்கு குலுப்பி ஐஸ் கேக்கு தாம்” என சலித்தவாறே அம்மா தண்ணி லாரியை நோக்கிப் போனாள். தொலைவில் குல்பி ஐஸ்காரன் எழுப்பும் மணி சத்தம் அமுதாவுக்கு கேட்டது. அவனை நோக்கி ஓடினாள். வண்ணக் குடையின் கீழே ரதம்போல வண்டியை ஓட்டிக்கொண்டு போன ஐஸ்காரனை “அண்ணா.... அண்ணா...” என கை தட்டி அமுதா அழைத்து நிறுத்தினாள். வியர்வை வழியும் முகத்துடன் மூச்சு வாங்க நின்றவளைப் பார்த்து, “ஒரு ஐஸ் பத்து ரூவாப்பா” என்றான். அமுதா, “ அண்ணா எம்பேரு அமுதாண்ணா கார்ப்பரேசன் ஸ்கூலுல ரெண்டாங்கிளாஸ் படிக்கிறண்ணா” என்றாள். ஐஸ்க்காரன், அதனால என்ன, துட்ட கொடு குல்பி தர்றேன்” என்றான். அமுதாவுக்கு காசு இல்லாமல் குல்பி கிடைக்காது எனத் தெரிந்ததும் “அண்ணா ஒரு வாட்டி இந்த மணியையாவது அடிச்சிக்கிறேண்ணா..”என கெஞ்சுகிற குரலில் கேட்டாள். ஐஸ்க்காரன் முகம் அந்த வெய்யிலிலும் புன்னகைத்தது. “சரி...ஒரு வாட்டி அடி” என அனுமதி கொடுத்தான். அமுதா கயிற்றைப்பிடித்து இழுத்தபொழுது நங் நங்கென்று அது எழுப்பிய சத்தத்தால் பசியை மறந்து பரவசமானாள். “ரொம்ப தேங்சுன்னா நான் வர்றேன்” என அமுதா திரும்பியபொழுது ஐஸ்க்காரன் என்ன நினைத்தானோ, இந்தா அமுதா” என பெட்டியிலிருந்து ஒரு குல்பி ஐஸை எடுத்து அமுதாவிடம் நீட்டினான். அமுதா, “துட்டு இல்லண்ணா” என வாங்க மறுத்தாள். “பரவால்ல வாங்கிக்க.. அண்ணனுக்கு துட்டு வேணாம் நீ நல்லாப்படிக்கனும். இந்தா பிடி” என்ற போது அமுதா கண்ணீர் மல்க குல்பியை வாங்கிக் கொண்டாள்.